மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்து தேவையில்லை- பிரஞ்சு விஞ்ஞானிகள்

உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் குறைந்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் துரிதமான தடுப்பு மருந்து விநியோகம்தான். இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளுடன் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்துவது பாதுகாப்பானது என்று உலக விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு மாற்று கருத்தும் அவ்வப்போது எழுவதை மறுக்க முடியாது.

தற்போது ஒரு ஆய்வில் மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்து தேவை இல்லை என்று தெரியவந்துள்ளது. லான்செட் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேஸஸ் முன்னதாக மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தை இந்த ஆண்டு இறுதிவரை எந்த நாடும் தங்கள் குடிமக்களுக்கு செலுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.

உலகின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத தடுப்புமருந்து கிடைத்ததும் மூன்றாவது டோஸ் குறித்து ஆலோசிக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை வழிமொழியும் வகையில் தற்போது பிரான்ஸ் விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வின் மூலமாக கருத்து ஒன்றை கூறியுள்ளனர். கொரோனா பல்வேறு மாதிரியாக உருமாறும் நிலையில் மூன்றாவது மூன்றாவது டோஸ் செலுத்துவதால் பயனில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir