பிரேசிலில் கனமழை, வெள்ளம் : இறந்தவர்கள் எண்ணிக்கை 117ஆனது

பருவநிலை மாற்றத்தால் பிரேசிலில் கனமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 117 பேர் உயிரிழந்தனர்.பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டியது.

30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டிய பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.நூற்றுக்கணக்கான கால்நடைகளும் இழுத்து செல்லப்பட்டன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.

இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.இதுவரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 117 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோரை காணவில்லை என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir