16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் சுமார் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நிலையில் குறித்த சந்தேக நபர் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரான தனியார் வகுப்பு ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

சந்தேகநபரை நேற்று (26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது மீளவும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரான ஆசிரியர் களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்திய நிலையில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெற்றோர்கள் மூலமாக களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply