அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு அமைவாக எதிர்வரும் நாட்களில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய செயன்முறையானது, கடவுச்சீட்டு விண்ணப்ப செயன்முறையை நெறிப்படுத்துவதையும், விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வந்தடைவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் (PMD) தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இலுக்பிட்டிய, இந்த நடைமுறையின் வளர்ச்சியையும் மற்றும் அதனுடைய நன்மையினையும் எடுத்துரைத்தார்.
கடவுச்சீட்டுகளை வினைத்திறனாக வழங்குவதற்கு வசதியாக, நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலகங்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து, தேவையான நடைமுறைகளை முடித்தவுடன், கடவுச்சீட்டு மூன்று நாட்களுக்குள் தபால் சேவை மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்தோடு, கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்தும் தரகர்களின் குறுக்கீடுகளை அகற்றும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஸ இலுக்பிட்டிய தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
T02