தமிழ் பௌத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ரணிலை பாராட்டுகிறேன்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பாராட்டுவதாகவும், முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் தமிழ் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அதன்போது இலங்கைத் தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்ரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தேசியவாதிகள் மறைக்க விரும்புகிறார்கள்.

விஜயன் வந்து இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து  ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் மீளப் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன். இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில் இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில  பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை.

இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திட்டித்தீர்ப்பார்களோ தெரியவில்லை.

அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும் ” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply