மனித உரிமை தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கைக்கு வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐ.நா பொதுச்சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது.

மேலும் காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்புக்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும் அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி உள்ளகப் பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப் பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை உள்ளடக்கிய 24 பக்க அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply