பாதுகாப்பு படைத்துறையை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் விடயத்தை மூடி மறைக்கும் அரசாங்கம்!

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களைச் சொல்லி வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவரினால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க நாட்டின் பாதுகாப்பு அமைச்சும், இராணுவ தலைமையகமும் மறுப்புத் தெரிவித்தன.

இந்த நிலையில் அவரது மரபணுப் பரிசோதனைக்காக அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டதா என, சிவாஜிலிங்கத்திடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பின்னர், உயிரிழந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் உடலை தாங்கள் மரபணுப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தினோம், என்று யுத்தம் முடிந்த ஒரிரு நாட்களில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் மரபணுப் பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் இருந்திருக்கவில்லை. இந்தியாவின் ஹைதராபாத்திலும், சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் தான் அந்த வசதி இருந்தாக நாங்கள் அறிந்து கொண்டோம். அதனைச் செய்து பதில் பெற சில வாரங்களாவது ஆகும்.

ஆகவே, யுத்தம் முடிந்த ஒரிரு நாட்களில் மரபணுப் பரிசோதனை செய்ததாகப் பொய்யான தகவலை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

எனினும் பிரபாகரனின் தந்தை, தாயார் அல்லது டென்மார்க்கில் உள்ள மூத்த சகோதரர், இந்தியவின் தமிழ் நாட்டில் வாழும் சகோதரி, கனடாவில் வாழும் மற்றுமொரு சகோதரி போன்றவர்களிடம் எந்தக் காலகட்டத்திலும் மரபணு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆனால், தேசியத் தலைவரது தந்தையாரும், தாயாரும், யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து 3 நாட்களின் பின்னர் தான் அரசாங்கத்தின் காவலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் இராணுவத் தடுப்பு முகாமான பலாகொடையில் இருந்தபோது, அவர்களுக்கே தெரியாமல் அரசாங்கம் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டாதா? அல்லது, தந்தை இறந்த பின்னர் அவரின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டனவா? அதேபோல வைத்தியசாலையில் இருந்தபோது அவரின் தாயாரின் மாதிரிகளும் அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டிருக்க முடியும்.

பிரபாகரனின் தாயார் 2011 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் திகதி காலமாகியிருந்தார். அவருடைய தகனக்கரியைகள் 22 ஆம் திகதி நடைபெற்றன.

அன்று நள்ளிரவு வேளை சிதையிலே இருந்த அவரின் அஸ்திகளின் மேலே 4 நாய்களை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து, கோர தாண்டவத்தை ஆடிச்சென்றிருந்தனர்.

அப்போது வேண்டுமென்றால் தாயாரின் அஸ்தியைக்கூட எடுத்துச் சென்றிருக்க முடியும்.

இவ்வாறான நிலைமையிலே, பிரபாகரனின் மாதிரிகளை நாங்கள் எடுத்து வைத்திருந்தோம், அதை அவருடைய தந்தை அல்லது தாயாரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தினோம், என்று சொல்வதற்கும், தேசியப் பாதுகாப்பிற்குக் குந்தகம் என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது?

அரசாங்கம் பச்சைப் பொய்யைச் சொல்லுகின்றது. ஒரு பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்றால், சட்டவைத்திய அதிகாரியின் முன்னால் தான் நடக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஒன்று நடந்ததாக அரசாங்கம் இதுவரை கூறவில்லை.

அதைவிட, ஒரு நீதிபதியின் முன்னால் தான் மரண விசாரணை நடைபெறவேண்டும். நீதிபதி தான் பிரேத பரிசோதனை நடத்துவதற்கான உத்தரவை வழங்க வேண்டும். அவ்வாறான எதுவும் இங்கு நடக்கவில்லை.

கருணாவையும், தயா மாஸ்டரையும் கொண்டு சென்று காட்டியவர்களுக்கு, ஒரு நீதிபதியை அல்லது ஒரு சட்ட வைத்திய அதிகாரியை உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்வதற்கு என்ன தடை இருந்தது?

அரசாங்கம் தொடர்ந்தும் பொய்யையும் கூறி, பித்தலாட்டமும் ஆடி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே பொய்மையாக்குகின்றது.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செய்வது உட்பட தான் நினைத்தவற்றைச் செய்வதற்கு, தேசியப் பாதுகாப்பு என்ற வார்த்தையை அரசாங்கம் பயன்படுத்துவது போல, தேசியத் தலைவர் பிரபாகரனின் விடயத்தை மூடி மறைப்பதற்காகத் திட்டமிட்டு, அதே தேசியப் பாதுகாப்பு என்பதை நாட்டின் பாதுகாப்புத் துறையும், படைத்துறையும் பயன்படுத்தியுள்ளன என்பதே உண்மை” என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply