நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தை, எவரையும் கைவிடாத வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார்.

தற்போது பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில் 3.3 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் அஸ்வெசும பலன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என்ற வகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காக 02 மில்லியன் பேரின் பெயர் பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் மூவர் அடங்கிய தெரிவுக்குழுக்களின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட பின்பே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும் என்கின்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது மேன்முறையீடுகளை ஜூலை 10 வரையில் சமர்பிக்கலாம்.

அதேபோல் சமூக நலன்புரித் திட்டங்களுக்கு தகுதியற்றவர்களின் விவரம் அடங்கிய பட்டியலில் பெயரிடப்பட்டிருப்போர் தமது எதிர்ப்புக்களையும் முறைப்பாடுகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு வெளியிடுவதற்கான கடிதத்தை பிரதேச செயலகத்தில் கையளிக்க முடியும். அது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply