இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழப் பழக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் என கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்து நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது,

சரத் வீரசேர பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் மஹிந்தானந்த அளுத்கமகேவின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கமைய ஒரு சிலர் சிங்கள பௌத்த மக்களுக்காக மாத்திரம் பேசி அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர்.

வேறு சிலர் அடிப்படைவாதத்துக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்து அவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகின்றனர்.

இவ்வாறானவர்கள் இலங்கையில் பல்வேறு இனங்களையும், மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வாழ்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் பிரதிநிதிகள் தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

எனது தொகுதியான நாவலப்பிட்டியில் அனைத்து இன மக்களும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நான் தலைமை வகிக்கின்றேன்.

அவ்வாறிருக்கையில், இது சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கருதுவது தவறு. அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையுடன் வாழ நாம் பழக வேண்டும்.

இலங்கை அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடாகும். எனவே சரத் வீரசேகர தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடேயன்றி, அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல.

இது தொடர்பில் எவரும் வீணாக கலவரமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply