யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்த்தன இந்தியா வழங்கிய சில பேருந்துகளை இலங்கைப் போத்துவரத்துச் சபையின் யாழ்ப்பாணக் கிளைக்குக் கையளிப்பதற்காகவும் இந்திய கடனுதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட அனுராதபுரம்-ஓமந்தை ரயில்பாதையில் தொடருந்தை வெள்ளோட்டம் பார்ப்பதற்காகவும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அதன் போது, இலங்கை பெறுகின்ற பல்வேறு கடன் திட்டங்களில் மிகப்பெரும் பகுதி வடக்கு-கிழக்கிற்கே செலவழிக்கப்படுகிறது என கூறியிருந்தார்.

அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“வடக்கு கிழக்கில் வீதிகள் புனரமைப்பு, மின்சார வசதி, தொலைத்தொடர்புகள், தொடருந்து சேவை போன்ற பல பணிகளுக்காக கடன் உதவிகள் செலவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன உண்மையை உணர்ந்துகொண்டு பேசுவது நல்லது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட யுத்தத்திற்கு முன்பாக, வடக்கு-கிழக்கில் மின்சாரம் இருந்தது.

தொலைத்தொடர்பு சேவைகள் இருந்தன. ரயில் போக்குவரத்து இருந்தது. குறைகள் இருந்த போதும் பல்வேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தன.

யுத்தத்தின்போது ரயில் தண்டவாளங்களும் சிலீப்பர் கட்டைகளும் இராணுவத்தினரால் பிடிங்கி எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன.

இவற்றிற்கு மேலதிகமாக ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை மரங்கள் தறிக்கப்பட்டு அவையும் பதுங்கு குழிகள் அமைப்பதற்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டன.

தென்பகுதியிலிருந்து வடக்குக்குக் கிடைத்த மின்சாரம் அரசாங்கத்தினால் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

வடக்கு-கிழக்கில் இருந்த தொழிற்சாலைகளும் நெல் களஞ்சியப்படுத்தும் இடங்களும் அரிசி ஆலைகளும் நிர்மூலமாக்கப்பட்டன.

மருத்துவ தேவைகளுக்குப் பற்றாக்குறைகள் ஏற்படுத்தப்பட்டது. வடக்கிற்கு எரிபொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவத்தினராலும் விமானப்படையினராலும் ஒட்டுமொத்தமான கட்டுமானங்களும் நிர்மூலமாக்கப்பட்டு தமிழ் மக்கள் மெழுகுதிரி வெளிச்சத்திலேயே தமது அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவை ஒருபுறமிருக்க, பல்லாயிரம் கோடிரூபாய் பெறுமதியான இராணுவத் தளபாடங்கள், குண்டுவீச்சு விமானங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள், கடற்படைக்கான கப்பல்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக பல பில்லியன் டொலர்கள் கடன் உதவி உலகின் பல நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

உள்நாட்டில் பேசித் தீர்க்க வேண்டிய ஒரு விடயத்தை, யுத்தமாகப் பிரகடனப்படுத்தி, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் அவரது வழித்தோன்றலான ரணசிங்க பிரேமதாச, அவருக்குப் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவரது வழித்தோன்றலான மகிந்த ராஜபக்ச ஆகியோர் காலத்திலும் இந்த யுத்தம் தொடர்ந்தது.

இந்தக் காலக்கட்டத்தில் சில ஆயிரங்களாக இருந்த பாதுகாப்புத் தரப்பினர் பல இலட்சங்களாக உயர்த்தப்பட்டனர்.

இலங்கையின் உள்நாட்டு வருமானத்தின் மிகப்பெரும் பகுதி யுத்தத்திற்கே செலவு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக வாங்கப்பட்ட கடன்களும் இதற்காகவே செலவு செய்யப்பட்டன.

இவை மட்டுமன்றி, வடக்கிற்கு மகாவலி நீரை அனுப்புகிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து கடன் பெறப்பட்டு தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டு அங்கு சிங்கள குடியேற்றங்களும் நடந்தேறின.

அதன் பிரகாரம் உருவாகியது தான் வெலிஓயா என்று தற்பொழுது பெயர்மாற்றம் பெற்றுள்ள மகாவலி ‘எல்’ வலயம்.

வடக்கு-கிழக்கில் இருந்த உட்கட்டுமான வசதிகளை அழித்தொழிப்பதற்கும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் துவம்சம் செய்வதற்கும் அந்தப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவுமே இந்தக் கடனுதவிகள் பயன்படுத்தப்பட்டனவே தவிர, தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக அல்ல என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply