வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி பலி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான நிலையில் வீதியில் காணப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் குடும்பத்தினர் அடையாளம் கண்டதை தொடர்ந்து உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவர் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து தானாக வெளியேறி தனது வீடு நோக்கி நடந்து செல்லும் வழியில் வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்தவர் வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய உசனார் வெள்ளைத்தம்பி என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply