சமஷ்டி குறித்து கனவு காணாதீர்கள் – தமிழத் தலைவர்களை எச்சரிக்கும் சுரேன் ராகவன்!

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்கள் தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தமிழ் பிரதிநிதிகள், இது அவசியமானது அல்ல என்றும் சமஷ்டி முறையிலான தீர்வே தங்களுக்கு வேண்டும் என்றும் வெளியே சென்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி குறித்து கனவுக் கணாதீர்கள். சமஷ்டி கோரிக்கையுடன் வட்டுக்கோட்டை வரை சென்று, மீண்டும் 2009 ஆம் ஆண்டு இந்நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இரத்த ஆறுக்கு மத்தியில் திரும்பி வந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இருக்க மீண்டும் யுத்தமொன்றையா நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அன்று சரத்பொன்சேகாவுடன் இணைந்து, சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்வோம் என்றே யாழில் கூறியிருந்தார் என சுட்க்காட்டியுள்ளார்.

அப்படியென்றால், இப்போது ஏன் இதற்கு மாறான ஒரு கருத்தை இவர்கள் வெளியிட வேண்டும் எனக் கேளிவியெழுப்பியுள்ளார்.

அதுவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே ஏன் இவ்வாறு கூற வேண்டும்?

இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க இடமளிக்க முடியாது. இனியும் இந்நாடு இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்காது எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, மீண்டும் யுத்தத்திற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிட வேண்டாம் என தான் தமிழத் தலைவர்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது எச்சரிக்கை கிடையாது. உண்மையைத்தான் கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள அப்பாவி விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரையும், இந்திய உயர்ஸ்தானிகரையும் மகிழ்ச்சிப்படுத்த தாம் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பயணம் முடிவடையும் முன்னரே சமஷ்டியைக் கோருவதை, வடக்கு மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தான் வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற வகையில் உறுதியாகக்கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply