மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்ற போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கான முறையில் இடம் ஒதுக்கமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி, ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது இடையில் குறிக்கிட்ட இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், இவனை வெளியில் அனுப்புங்கடா, இவனை உள்ளே விட்டது யார் என்று அச்சுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின் போது ஊடகவியலாளர்களுக்கு இடம் ஒதுக்கிக்கொடுப்பது தொடர்பில் தொடர் சர்ச்சை ஏற்படுகின்றமை தொடர்பில், இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சென்றும் கவனம் எடுக்காத காரணத்தினால்,  இன்றும் ஊடகவியலாளர்கள் சரியன இடம் இன்மையால் இடையூறாக இருக்கின்றார்கள் என ஆளுநர் கூறியிருந்தார்.

இதற்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் ஆளுநருக்கு தெளிவுபடுத்த முற்பட்டபோதே இராஜங்க அமைச்சர் பிள்ளையான் ஊடகவியலாளரை கடுமையான வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியுள்ளார்.

பிள்ளையான் இவ்வாறு தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை அடக்கி ஆள முற்படுவது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு சவாலாகவே மட்டக்களப்பில் மாறியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்களை இழந்த தாம் இன்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியில் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை ஆளுநர் அழைத்துச் சென்று பிரச்சினை தொடர்பாக கலந்தாலோசித்ததுடன் இதற்கான நிரந்தரமான தீர்வு ஒன்றினை மிக விரைவில் பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply