உலக வல்லரசுகளை தமிழரை நோக்கி நகர்த்தும் புதிய வியூகம்!

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தாம் புது வியூகம் வகுக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பில் மீண்டும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்காமல் புதிய வழிகளை கையாள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் மூலம் உலக வல்லரசுகளையும் தங்களை நோக்கி வரச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் இன்று 13 மைனஸில் வந்து நிற்கின்றது. 36 ஆண்டுகளாக 13ஐ சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

அதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாகத் தேய்ந்து செல்கின்றது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரப் பரவலாக்கமும் இப்படித்தான் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத்தளத்துக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் சீனாவுக்குச் செயற்கை துறைமுக நகர உருவாக்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சீனாவின் பரம எதிரியான பாரத தேசத்திற்குச் சென்று அந்த நாட்டின் பிரதமரைச் இலங்ழக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேவையை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பு குறித்தும் பேசியுள்ளார்.

இங்கேதான் சிங்களவர்களின் கெட்டித்தனத்தைப் பார்க்கவேண்டும் என விசனம் வெளியிட்டுள்ளார்.

அவர்களால் சீனாவையும் சமாளித்து இந்தியாவையும் சமாளிக்க முடிகின்றது. ஆனால் தமிழர்கள் இந்தியா, இந்தியா என்று ஒற்றைப் புள்ளியில்தான் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எப்போதும் இந்தியாவையே நம்பியிருந்திருக்கின்றார்கள். அதற்குப் பழக்கப்படுத்தியும் விட்டார்கள்.

இதனால்தான் வேறு எதையும் சிந்திக்கத் தலைப்படாதவர்கள் ஆகிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இடமளித்த பின்னரும் இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதியை அழைக்கும் நிலைமை இருக்கின்றது.

ஆனால் இந்தியாவையே இன்றுவரை நம்பியிருக்கும் தமிழர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரப்பட்ட எந்தவொரு அதிகாரமும் பறிக்கப்படாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இவ்வாறானதொரு நிலையில் 13 குறித்து பேசி இன்னமும் தமிழர்கள் எவ்வளவு காலத்தை வீணடிக்கப்போகின்றனர் என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒன்றுமில்லாத 13 தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதால் அதற்கு அப்பால்  யோசிக்கவில்லை. சிந்தனைத் தளத்தை விரிவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அவர்களுக்குத் தேவை என்பதை உணர்த்தச் செய்யும் போதுதான் தமிழரின் கோரிக்கைகளை அவர்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதற்குரிய வகையில் புதியதொரு பாதையை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply