ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு பலர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பயணிகள் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

ரயில் எண் 12956 கொண்ட ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 31) காலை பல்கார் ரயில் நிலையத்தை தாண்டி சென்ற போது ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து ரயில்வே பாதுகாப்பு படையின் மற்றொரு துணை காவல் ஆய்வாளரை நோக்கி சுட்டுள்ளார். அதன்பிறகு 3 பயணிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து ஓடும் ரயிலில் இருந்து வெளியில் குதித்து தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி ரயில்வே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அருகிலுள்ள ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

ரயில் பெட்டி ரத்த கறையாக காட்சி அளித்தது, சக பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். தகவலறிந்து வந்த ரயில்வே பொலிசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்  கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரிடம் இருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓடும் ரயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த உயிரிழப்புகள் வட இந்தியாவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மேற்கு ரயில்வே CPRO அதிகாரி, மும்பை – ஜெய்ப்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே ரிசர்வ் கான்ஸ்ப்டபிள் சேத்தன் குமார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சக வீரர் ஏ.எஸ்.ஐ திகாராம் மீனா மற்றும் 3 பயணிகள் சுடப்பட்டனர். குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார்.

ஆனால் இதற்கான பின்னணி காரணம் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

டி.ஆர்.எம் நீரஜ் வர்மா கூறுகையில், 4 பேர் சுடப்பட்டுள்ளனர். குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply