பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 18 பேருக்கு காயம்

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளனர்.

வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த பேருந்து ஒன்றுக்கு பாதையை விட்டுக்கொடுக்க முற்பட்ட போது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பயணிகள் வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பலத்த காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்து நடந்த போது, பேருந்தில் குறைந்தது 100 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply