தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகி கஜேந்திரகுமார் குழு – ஈ.பி.டி.பி பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர் குந்தகம் விளைவித்து வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகியாகவும் துயராகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழு இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும், யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய தமிழ் காங்கிரஸ் குழுவினரை தமிழ்த் தேசத்தில் இருந்து அகற்றினால் தான் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களது இனப் பிரச்சினைக்கு அல்லது அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஏதாவது ஒரு சாட்டுப் போக்கு காட்டி குந்தகம் எற்படுத்தி தாங்கள் மட்டும் தான் தமிழ்த்தேசியவாதிகள் என கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் குழுவினர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி அதற்கு பின்னான காலத்திலும் சரி தமது சுய இலாபங்களை மட்டுமே முதன்மையாக கொண்டு இன்னொரு தரப்பினரது நிகழ்ச்சி நிரலுக்காக ஓலமிட்டு வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சமஸ்டி தான் தமிழருக்கு வேண்டும் என்று ஊடகங்களில் ஓலமிடும் இவர்கள் தமது கட்சியின் யாப்பில் தமது கொள்கையாக ஒற்றை ஆட்சியின் கீழ் தான் இலங்கை தீவு இருக்கும் என்பதை துல்லியமாக வலியுறுத்தி இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகையவர்கள் தமிழ் மக்களுக்கு இன்று சமஸ்டி முறையிலான தீர்வை கோருவது எந்தப் பொறிமுறையில் அமையவேண்டும் என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்களா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை மலையக தமிழ் மக்களுக்களின் குடியுரிமையை அன்றைய ஆட்சியாளர்கள் பறித்தபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் வி. குமாரசுவாமி ஆகியோர் அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்து மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு கைமாறாக அன்றைய ஆட்சியில் கைத்தொழில் அமைச்சை குமார் பொன்னம்பலமும் இராஜாங்க அமைச்சை குமாரசுவாமியும் இலஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது கூட ஒற்றையாட்சிக்கு கீழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசியலமைப்பின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களில் முதல்வராகவும் தவிசாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் உறுதிப்பிரமாணம் செய்து அங்கம் வகித்துக்கொண்டு பின்னர் 13 ஆவது அரசியலமைப்பை தென்னிலங்கை இனவாதக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவர்களுடன் இணைந்து எதிர்ப்பதாக மக்களை அடிமுட்டாளாக்குகின்ற இழிவான அரசியலை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனடிப்படையில் கஜேந்திரகுமாரின் குழுவினர் தான் தமிழ் தேசத்தின் மாபெரும் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தாம் சுயநலத்துக்காக யாருடனும் ஒட்டி வாழவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமது தேவைகளுக்காக எவரிடமும் மண்டியிடப் போவதுமில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமே தென் இலங்கையை அரசிடம் தாம் அரசியல் இணைக்கப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் நிலைப்பாடு தான் சரி என்பதை இன்று கஜேந்திரகுமாரே ஏற்றுக்கொண்டுள்ளார். சமஸ்டி என்பது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கட்சி என்பதற்குள் தான் பிணைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தான் கஜேந்திரகுமார் குழுவினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “கஜேந்திரகுமாருக்கு மட்டும் சமஸ்டி சொந்தமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்கள் அணை உள்ளது” என தெளிவாக எடுத்துரைத்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை பொறுத்தக்கொள்ள முடியாத கஜேந்திரகுமார் குழு தம்மீது வழமைபோன்று அவதூறுகளையும் சேறு பூசல்களையும் மேற்கொள்ள முனைகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தமிழ் மக்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை மாபெரும் துரோகத்தைச் செய்து வரும் கஜேந்திரகுமார் குழு யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply