பதின்ம வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில்  உயிரிழந்துள்ளார்.

சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற  குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 5 ஆம் திகதி குளிப்பதற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற பெண்ணை காணவில்லை என பெண்ணின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருடன் குறித்த 19 வயது பெண்ணுக்குத் தொடர்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அதன்படி, இருவரும் நேற்றைய தினம் ஊருக்கு வந்த போது 55 வயதுடைய நபர் மக்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply