தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக மீட்டு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. IND-TN-06-MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் 3 வெவ்வேறு சம்பவங்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகிறது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.

இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாதிக்கும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வினை காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் தலையீடும் ஆதரவும் இந்தப் பிரச்னையை விரைவாகத் தீர்த்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply