சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் – தில்ருக்ஷி டயஸ் விடுதலை!

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் அரசாங்க பரிசோதகர் திணைக்களம் ஆகியவற்றினால், முன்னர் வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு திருத்தப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், தொடர்புடைய ஒலி நாடா சமூக ஊடகங்களில் பரவியபோது, ​​​​சம்பவத்தை விசாரிக்கத் தொடங்கிய பொதுச் சேவை ஆணைக்குழு, அந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை பணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

எனினும் 2021ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகமும் அரசாங்க பரிசோதகர் திணைக்களமும் இணைந்து நடத்திய நீண்ட விசாரணையின் போது தொலைபேசி உரையாடல் முழுவதையும் சிதைத்து ஒலிநாடா தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அன்றைய அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாக இருந்தது, தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தன்னுடன் இணைந்து செய்த ஒலிப்பதிவு முழுவதையும் பகிரங்கப்படுத்துமாறு எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியிருந்தார்.

தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தற்போது ஓய்வுபெற்றுள்ள நிலையில், பொதுச் சேவை ஆணைக்குழுவின் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் நிலுவை சம்பளம் மற்றும் சலுகைகளுக்கு அவர் உரித்துடையவராவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply