நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலியுடன் கூடிய மாலை மற்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் என்பன களவாடபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் ஆலயத்தின் பூசகரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இந்த சம்பவம் புதன்கிழமை (09) மாலை இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டினை பொறுப்பேற்ற நோர்வூட் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தோட்ட பகுதிக்கு சென்று தடயவியல் பொலிஸாரை வரவழைத்து விசாரணைகளை ஆரம்பித்த போது ஆலயத்தின் உண்டியல் மற்றும் கத்தி ஒன்று தேயிலை மலையில் இருந்து மீட்கப்பட்டன.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தோட்ட பகுதிக்கு ஹட்டனில் இருந்து பெட்டிமா என்ற பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பொலிஸ் மோப்பநாய் உண்டியல் இருந்த தேயிலை மலையில் இருந்து நேரடியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சென்று அமர்ந்து கொண்டது.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆலயத்தின் பூசகரை கைது செய்து விசாரனைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
