இனவாத அரசியல்வாதிகளின் வாய்களுக்கு பூட்டுப் போடுங்கள் – ரணிலுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இலங்கையில் மீண்டும் வன்முறை மற்றும் இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்துவதோடு, அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

இலங்கை பௌத்த சிங்கள நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது எனவும்   வடக்கு, கிழக்கில் விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்குத் திரும்புவேன்  என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களைக் கக்கி வருவதுடன் மீண்டும் வன்முறையைத் தூண்டி இன மோதலுக்கு வழிவகுக்கும் உரைகளையும் ஆற்றி வருகின்றனர் இதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்படியான கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

பௌத்த சிங்கள அரசியல்வாதிகளின் இப்படியான கருத்துக்கள் நாட்டில் மீண்டும் வன்முறையைத் தூண்டி; இன மோதலுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களுக்கு எதிராக வலிந்து வன்முறை மற்றும் மோதலை ஏற்படுத்த ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்குக்கு சென்று தமிழர்களின் தலைகளை வெட்டிச் செல்வேன் என அநாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்ட மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, தென்னிலங்கை இனவாதிகளை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படியான மோசமான செயற்பாடு தொடர்ந்தால் தாம் இலங்கை அரசுடன் எப்படிப் பேச்சு நடத்துவது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இனவாதிகளை ஜனாதிபதி கட்டுப்படுத்தாவிட்டால் அரசுடன் தாம் பேச்சு நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஜனாதிபதி ரணிலிடம் நேரில் கூறவும் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply