மக்கள் விடுதலை முன்னணிக்கு அமைச்சர் டிரான் அலஸூடன் தொடர்பு இருப்பதாகவும் அவருடன் இணைந்து ஐரோப்பாவில் தீவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக சுமத்தப்பட்டு குற்றச்சாட்டை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என்ற போதிலும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சி கவனத்தை ஈர்ப்பதற்காக சிறிய பிள்ளைகள் விளையாட்டு பொருட்களை தரையில் தூக்கி அடிப்பது போன்ற செயலை செய்துள்ளது.
இதனால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை எனவும் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி, அமைச்சர் டிரான் அலஸூடன் இணைந்து ஐரோப்பாவில் தீவு ஒன்றை கொள்வனவு செய்ய பணத்தை முதலீடு செய்துள்ளதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
