ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்தும் அடைக்கலநாதன்!

தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரமின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு தேவாநாயகம் மண்டபத்தில்  நடைபெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற  நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில்  எங்கு பாத்தாலும் பிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், முப்படைகள்  தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனையெல்லாம் பார்க்கும் போது ஏன் ஆயுதப் போராட்டத்தினைக்  கைவிட்டோம் என வருத்தமாக உள்ளது.  மீண்டும் ஆயுதப்போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணமும் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply