ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் திடீர் மரணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிள்ளையான் கட்சியைச் சேர்ந்த ‘கஜன் மாமா’ என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகம் (வயது 56) இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவந்த உயிரிழந்த கஜன் மாமா மற்றும் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் உட்பட 5 பேர் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு  குறித்த வழக்கில் இருந்து அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

இந்தநிலையில் உயிரிழந்த கஜன் மாமா மட்டக்களப்பு, 5ஆம் ஒழுங்கை, நாவற்குடாவில் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply