யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள தூபி இடிக்கப்படுமா? அல்லது துணைவேந்தர் மாற்றப்படுவாரா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவரிடமிருந்தும், தனி ஆட்கள் இருவரிடமிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய குறிப்பிட்ட தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி கையாளுகை மற்றும் அனுமதிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.

பல்கலைக் கழகத்தினுள் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த தூபி இடிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எனினும், இது தூபியை இடிப்பதற்கான முயற்சியல்ல என்றும் முறையற்ற விதத்தில் தூபி அமைப்பதற்கு அனுமதித்தார் எனக் குற்றஞ்சாட்டிப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சியே என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற துணைவேந்தர் தெரிவின் போது தற்போதைய துணைவேந்தர் மீளவும் பதவிக்கு வரக் கூடாது என்பதற்காகப் பல்கலைக்கழகத்தினுள் இருந்து பேராசிரியர் ஒருவர் உண்மைக்குப் புறம்பாகப் பல வதந்திகளைப் பரப்பியதோடு, தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் வெவ்வேறு பெயர்களில் ஒரே கடிதத்தை முறைப்பாடுகளாக அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply