கொள்ளைக் கூட்டத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – சஜித் ஆவேசம்!

ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டமை முக்கியமானதொரு நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக தான் அனைத்து தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது ஒரு அடையாள நடவடிக்கையாகவே கருதப்படுகிறது எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இது சட்டமாக கருதப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்த அவர், இதில் அனைவரும் உறுதியாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் சபைக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்தது போல, நீதிமன்றத்தின் இந்த செயற்பாடுக்கு எதிராகவும் ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து அரசமைப்புக்கு இணங்க, சட்டரீதியான ஒரு நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என இவ்வேளையில் தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்ரிசிறி அறிக்கைகள், குசலா சரோஜினி அறிக்கை, கணக்காய்வாளரின் அறிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வாளரின் இந்த அறிக்கை தொடர்பாக சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்றம் வலியுறுத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply