இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும் என்றும் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, கூட்டமைப்பு விரும்பினால் அரசுடன் பேசலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு எதிரான விமர்சனங்களை ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேசப் பலத்துடன் இருக்கின்றார்கள் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்திற்கு பதிலைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து கொண்டு சம்பந்தன் எம்மை மிரட்ட முடியாது. இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும். சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. எனவே, சம்பந்தன் விரும்பினால் அரசுடன் பேசலாம்.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற காரணத்துக்காகவே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை எமது புதிய ஆட்சியில் பேச்சுக்கு அழைப்போம். அந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

சர்வதேசத்தை அவர்கள் நம்பினால் எந்தவித நன்மையையும் அவர்களுக்கும் கிடைக்காது. தமிழ் மக்களுக்கும் கிடைக்காது” என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir