பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, நான்கு வாள்களை வைத்திருந்த 23-35 வயதுடைய எட்டு ஆண்களும், 26, 46 மற்றும் 47 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்களின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சந்தேகநபர்கள் வெளிநாட்டில் மறைந்திருக்கும் வியாபாரி ஒருவரால் நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துவருகின்றனர்.