சுனாமி ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டது.

உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு காலை 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இதேவேளை, இலங்கை தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏற்றிவைத்தார்.

பொதுச்சுடரை மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி ஏற்றிவைத்ததை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்கினர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply