ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம்!, என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு கருத்துக்கனை முன்வைத்துவருகின்ற அதேவேளை மறுபுறம் சிவில் அமைப்புகள் சில நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
தற்போதைய ஜனாதிபதி, பதவிக்கு வந்ததன் பின்னர் முதலாவதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதற்கு வேட்பு மனுக்களைக் கோரியதன் பின்னர் அதற்கான நிதியை விடுவிக்காமல் அந்தத் தேர்தலைப் பிற்போட்டுள்ளார்.
ஆனால், இப்போது ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையின் ஊடாக ஒரு விடயத்தைத் தெரிவித்துள்ளது.
அதாவது, தேர்தல் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என தெரிவித்து வருகின்றது.
அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என இப்போது கூறுகின்றனர்.
இந்த நாட்டில் தேர்தலை நடத்துவது மற்றும் அதற்கான திகதியைத் தீர்மானிக்கு அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே காணப்படுகின்றது.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியே 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டது.
ஆனால், அந்தத் தேர்தலை நடத்தவிடாது ஜனாதிபதி தன்னிச்சையாக சில தீர்மானங்களை மேற்கொண்டு தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தேர்தலைப் பிற்போட்டுள்ளார்.
அதனால்தான் நாட்டில் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் ஜனாதிபதியால் தன்னிச்சசையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே, ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம்! என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நிதியின்மைப் பிரச்சினையால் தேர்தல் பிற்போடப்படவில்லை. ஜனாதிபதியும் மொட்டுத் தரப்பினரும் தேர்தலில் வெற்றிபெறமுடியாமை காரணமாகவே தேர்தலைப் பிற்போட்டுள்ளனர், என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார். (04)
