அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கட்டுப்பணத்திற்கான வைப்புத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து 26 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், சுயேட்சைக் குழுவொன்றின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான வைப்புத் தொகையான 75,000 ரூபா 31 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும், சுயாதீன வேட்பாளருக்கு 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வேட்பாளர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படாத 1000 ரூபாவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை 6,000 ரூபாவாகவும், சுயாதீன வேட்பாளர்களுக்கு 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு வைப்புத் தொகையில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அடையாளம் காணப்பட்டதற்கிணங்க ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர் சமர்ப்பித்த பிரேரணையின் பிரகாரமே அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறிப்பாக, வைப்புத் தொகை தொடர்பான தற்போதைய சட்ட விதிகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திருத்தப்படவில்லை எனவும் பணவீக்கம் காரணமாகவும் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாகவும், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட வைப்புத் தொகையை தற்போதும் ஏற்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.