மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததோடு சிசுவின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்துள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது, சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சிசுவின் சடலம் என வைத்தியசாலை ஊழியர்கள் தமக்கு காட்டிய சடலம் தங்களுடைய குழந்தையின் சடலம் அல்ல என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் , சிசுவின் சடலம் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் டிஎன் ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என பெற்றோர் வைத்தியசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கு அனுமதி வழங்கிய போதிலும், வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் உறவினர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (27) பிற்பகல் பிரேத அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிசு ஒன்றின் சடலத்தை வைத்தியசாலை ஊழியர்கள் பெற்றோரிடம் காண்பித்த போதிலும் அது தமது பிள்ளையல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த சிசுவின் தந்தை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“நான் இன்னும் என் குழந்தையின் முகத்தை கூட பார்க்கவில்லை. இவர்கள் எங்களை அங்கும் இங்கும் அனுப்புகிறார்கள். தயவுசெய்து எங்களுக்கு நியாயம் கொடுங்கள்.” என்றார்.
