எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், எமது நாட்டின் ஜனாதிபதியாவதற்கு மிகவும் பொருத்தமானவர் ரணில் விக்கிரமசிங்கவே எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தினால் ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கையின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீழ்ச்சியடைந்திருந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது சவாலாக இருந்தது.
அந்தத் தியாகங்களின் முன்னேற்றத்தை இன்று நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களும் அனுபவித்து வருகின்றனர். தற்போது நாட்டில் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. இன்று நீங்கள் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் பிள்ளைகள் பசியால் வாட மாட்டார்கள்.
ஒரு நாட்டை ஆள்வதற்கு ஒரு மூளைசாலி அவசியமாகும். அதனால் தான் நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூடவே இருந்து அவரை பாதுகாத்து வருகின்றோம். அவர் நாட்டை மீண்டும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை இருந்ததாலேயே நாம் அவருடனேயே இருக்கின்றோம்.
அவர் இந்த நாட்டை மீட்டெடுப்பார் என்பது உறுதி. அதனால்தான் நான் சொல்கிறேன், அவரைத் தொந்தரவு செய்யாமல் 12 ஆண்டுகள் இந்த நாட்டை அவர் ஆள வழிவிடுங்கள். அவர் 12 வருடங்கள் இந்த நாட்டை வழிநடத்துவார் என்றால் இலங்கை ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக மாறும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்” என்றார்.
