கடந்த வரவு செலவு திட்டத்தில் (2023) 43.8 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என ‘வெரிட்டே ரிஸர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் மூலம் 48 மாதங்கள் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வின் கீழ் மூன்றாவது கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியின் கீழ் இலங்கை பெற்றுள்ள மொத்தத் தொகை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்பான கடன் திட்டத்தின் கீழ் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆதரவை வழங்குவதற்காகவே இந்த கடன் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள், இந்த கடன் திட்டத்தின் கீழ் முன்னேற்றம் வலுவான மட்டத்தில் இருப்பதாகவும், சமூக செலவினங்களின் சிறிய இலக்குகளைத் தவிர மற்ற ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் சர்வதேச நாணய நிதியம் நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சாதகமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையிலேயே உள்ளதுடன், கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான செயல்முறையும் ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
