இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கோப் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 01 அன்று, ஜனாதிபதி விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக சுயாதீன ஊதியக் குழுவொன்றை நியமித்தார்.
குறித்த சுயேட்சைக் குழு உறுப்பினர்களில் தினேஷ் ஸ்டீபன் வீரக்கொடி, அர்ஜுன ஹேரத், கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, திருமதி சுதர்மா கருணாரத்ன, அந்தோனி நிஹால் பொன்சேகா, அனுஷ்கா எஸ் விஜேசிங்க மற்றும் துமிந்த ஹுலங்கமுவா ஆகியோர் அடங்குவர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோப் குழுவின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் சம்பள திருத்தம் தொடர்பான கோப் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய சம்பள உயர்வை மீளாய்வு செய்வதற்கு சுயாதீனமான ஊதியக் குழுவை நிறுவியமை குறிப்பிடத்தக்கது.
