கோத்தபாய ராஜபக்ஷவிற்கு 5 வருட காலத்திற்கு ஆட்சி வகிக்க மட்டுமே மக்கள் ஆணை கிடைத்தது. அக்காலப்பகுதியில் இடைக்கால ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவை அந்த காலப்பகுதிக்கு அப்பால் ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது என அந்த முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு தொழிலதிபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் அவ்வாறு பதிலளித்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சட்ட ரீதியிலான அல்லது தார்மீக ரீதியிலான எந்தவொரு அடிப்படையும் இல்லை, என தெரிவித்த அவரிடம், ‘இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் செயற்படுவீர்களா?’ என கேட்டபோது, இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்கப்படும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
