இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற திறப்பு விழாவில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானப்படையின் உழைப்பு மற்றும் பங்களிப்புடனும், கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையுடனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட முதல் மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு இதுவாகும்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், கதிர்காமம் ஆலய நிதி உதவியுடன் 2023 ஆம் ஆண்டு மூன்று மாடிகளைக் கொண்ட சிகிச்சை வளாகம் நிர்மாணிப்பதற்காக அதன் பஸ்நாயக்க நிலமே முன்வந்தார்.

இத்திட்டத்திற்கு விமானப்படையினரின் உழைப்பின் காரணமாக மூன்று மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகம் நான்கு மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகமாக கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களைப் பயன்படுத்தி , புதிய எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்விற்கு இந்த திட்டம் நம்பிக்கையளித்து வழிவகுத்துள்ளது.

இந்த பிரிவின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும், இலங்கை விமானப்படைக்கு பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படை தளபதி இதன்போது தமது இணக்கத்தை வௌியிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply