சுகாதார அமைச்சுக்கு இந்த வருடம் அதிகூடிய நிதி ஒதுக்கீடு- நலிந்த ஜயதிஸ்ஸ!

வரலாற்றில் முதன்முறையாக சுகாதார அமைச்சுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதிகூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற, மஹரகம அரச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணு மாற்று சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதார அமைச்சகம் என்பது பொதுவாக எந்த அரசாங்கமும் கேட்கும் பணத்தை கொடுக்கும் இடமாகும். வரலாற்றில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகை இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளிநாட்டு சர்வதேச அமைப்புகளின் ஆதரவை உள்ளூர் தூதுவர்கள் மூலமாகவும், நமது அமைச்சகத்தின் மூலமாகவும் பெறுகிறது.

தற்போது நாம் ஏற்பாடுகள் அனைத்தையும் முறையாகவும், திட்டமிட்டதாகவும் பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில், அரசியல் தேவையின் அடிப்படையிலோ, வைத்தியசாலைக்குச் சென்றபின் மனதில் எழும் உணர்வுப்பூர்வமான எண்ணங்களின் அடிப்படையிலோ எவருக்கும் உதவ முடியாது.

அடுத்த 20 ஆண்டுகளை கருத்திற் கொண்டு தேசிய திட்டத்தின்படி இந்த வளர்ச்சிப் பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய உள்ளூர் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகவும், தேசிய வைத்தியசாலையாகவும் அபிவிருத்தி செய்யும் கனவுகளை கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்தக் கனவுகள் தேசியத் திட்டத்துடன் எந்தளவிற்கு நன்றாக ஒத்துப்போகின்றன என்பதைக் கருத்திற் கொண்டு, செயல்படுவோம்” என்றார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply