ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம்.நெளபர் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (11) இடம்பெற்றது.

பதில் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஏகமனதாக ஏ.எம். நெளபரை தெரிவு செய்தனர்.

தவிசாளராக பதவி புரிந்த ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை கடந்த ஜூலை மாதம் 20 ம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை வெற்றிடத்தை நிரப்புவதற்கு தவிசாளர் தெரிவு இடம்பெற்றது

பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் இன்றைய அமர்வில் பதின்மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டு புதிய தவிசாளரை தெரிவு செய்தனர்.

இதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்களும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கலந்து கொண்டு புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இன்றைய தவிசாளர் தெரிவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir