மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களில் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப் பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.
இன்று(20) காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வது பாதிக்கப்பட்ட நிலையில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாலையடிவட்டை – வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர்-ராணமடு வீதி, வெல்லாவெளி – உகன வீதி ஆகியவற்றிலும் வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.