
இலங்கையின் 77ஆவது சுதந்திர நாளான இன்றைய தினத்தில் ‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தாயகத்தின் கரிநாள்’ என தெரிவித்து, தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கறுப்புகொடி ஏந்தி மாபெரும் போராட்டம் ஆரட்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளாக,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.
தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்
தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்
சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
எமது நிலம் எமக்கு வேண்டும்.
தாயகம், தேசியம், அரசியல் சுயநிரணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்
வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.
எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.