
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. தற்போது அரசியல் ஆதரவு இல்லாது போனமையால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. அதனால் அவர்களை பொலிஸில் கூட இணைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. பாதாள உலகக் குழுக்களுக்கு தற்போது அரசியல் ஆதரவு இல்லாதுபோயுள்ளது. தமது செயல்பாடுகளை செய்ய முடியாதென்பதால் அவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர். அதனால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர்.
58 பாதாள உலகக் குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்த குழுக்களில் 1400 பேர்வரை உள்ளனர். இந்த குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனனர். 2024ஆம் ஆண்டுடில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வாள்வெட்டு சம்பவங்கள் 5 என மொத்தம் 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 17 விசாரணைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களில் பின்புலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொலிஸார் அல்லது இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு துறையினரின் ஆதரவு இருந்துள்ளது. இவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் டி56 ரக துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம். பொலிஸாரின் செயல்பாடுகளுக்கு தற்போது எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லை. கடந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும்.
சர்வதேச ஆதரவுடன் குற்றவாளிகளை பிடிக்கும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று சிறைசாலைகளில் இருந்து செயல்படுத்தப்படும் குற்றச் செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சில சந்தேகநபர்கள் படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் கடற்படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கு செயல்பட முடியாது போயுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்று வழிநடத்த முற்படுகின்றனர்.
பல ஆயுதங்கள் சமூகத்தில் உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. பொது மக்கள் இவை தொடர்பில் ரகசியமான தகவலை 1997 என்ற இலக்கத்துக்கு வழங்க முடியும்.
டி56 ரக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் 10 இலட்சம் வரை பரிசை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயல்பாடுகளுக்கு பொது மக்களின் ஆதரவு அவசியமாகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75 12-போர துப்பாக்கிகள், 7 உட்பட பல துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.