
SK Vlog யூடியூப்பர் கிருஷ்ணா யாழ். இளவாலை காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (10) நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.
அவர் தனது தளத்தில் வெளியிட்ட காணொளி பதிவில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் உட்புகுந்து அங்குள்ள பெண் பிள்ளை ஒன்றை தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி இழிவுபடுத்தி பேசியிருப்பது பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி சர்ச்சை எழுந்ததுடன், எதிர்ப்பையும் தெரிவித்து வந்திருந்தனர்.
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு அத்துமறி உள் நுழைந்து குறித்த காணொளியை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த யூடியூப்பர் நேற்றைய தினம் அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல முயன்ற வேளை பண்டத்தரிப்பு – சில்லையூர் மத்தி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது அவருடன் இன்னும் மூன்றுபேர் என மொத்தமாக நால்வர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாக்கு மூலம், ஊர் இளைஞர்களின் வாக்குமூலத்தை பெற்று அதன்பின்னர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
வற்புறுத்தல், அத்துமீறி வீட்டினுள் உட்புகுதல், தகாத வார்த்தை பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில கைது செய்யப்பட்ட நால்வரையும் இன்றையதினம் (10) நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.