தேசபந்து தென்னகோனை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையில், நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நேற்று (09) கூறியதோடு, சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply