
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோ சி மின் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன், முக்கிய உரை ஒன்றை நிகழ்த்துவார் என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் வியட்நாம் விஜயத்தின் போது, இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்றும், வர்த்தக சமூகத்துடன் இணைந்து கொள்ள ஜனாதிபதி எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் செல்லவுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.