
இந்திய இராணுவத்தினர், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியாவானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் நேற்று (6) நள்ளிரவு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் ஆகிய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும், பாகிஸ்தான் இராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து எந்தத் தாக்குதலும் நடாத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவர் என்று குறிப்பிட்டு, ஜெய்ஹிந்த் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது,
தந்திரமான எதிரி (இந்திய), பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தியா திணித்த இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு தகுந்த பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு துணை நிற்கிறது. பாகிஸ்தானுக்கும், நம் ராணுவத்துக்கும் எதிரியை எப்படி கையாள்வது என்று தெரியும். எதிரியின் தீய நோக்கங்களை ஒருபோதும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என பிரதமா் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறியிருப்பதாவது,
சமீபத்தில், எதிரியான இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது.
அவர்கள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஒரு ஏவுகணை பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தியா இராணுவம், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி தெரிவித்திருந்தார்.
இந்தியாவால் அவ்வாறானதொரு தாக்குதல் நடாத்தப்பட்டால், அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளமையானது பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாகியுள்ளது.