20 வது திருத்தத்தை செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்ய தீர்மானம்

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட 20 வது திருத்தத்தை செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த முடிவை ஆதரிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம், ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்குவதற்கான ஒரு விதிமுறையையும், உயர்மட்ட அரசாங்க பதவிகளில் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த அதிகாரம் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு சபைக்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், புதிய திருத்தத்தின் நோக்கம் அதனை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்குவதே என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு 20 ஆவது திருத்தத்தின் மூலம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள அதன் தற்போதைய மூன்று உறுப்பினர்களை ஐந்து ஆக உயர்த்தவும் அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

20 வது திருத்தத்தின் வரைவு எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஏற்கெனவே கணிசமான எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவர்கள் நாடு மற்றும் மக்கள் சார்பாக அரசாங்கம் எடுக்கும் அனைத்து முற்போக்கான நடவடிக்கைகளையும் ஆதரிக்க ஒப்புக் கொண்டதாகவும் அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir