கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார்.
ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய நிமலராஜு சாருமதி என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த இளம் தாய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும், ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்தார்.
இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்ததுடன், மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்குபடுத்தினர்.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் உறுதியாகாத நிலையில், உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
