ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அதனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, அங்கிருந்து இன்று (27) ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இன்று (27 ) முதல் 30ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய பேரரசரைச் சந்திக்கவுள்ளார்.
ஜப்பானிய பிரதமருடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை முன்னிலைப்படுத்தி உச்சிமாநாட்டு சந்திப்பு ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மற்றும் டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில், ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
மேலும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ‘எக்ஸ்போ 2025 ஒசாகா’ கண்காட்சியிலும் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் வௌிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
